Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
காலை சரியாக ஐந்து மணிக்கெல்லாம் அழைப்பு மணி ஒலித்தது.
ஸ்ரீதர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். விழித்ததும்தான் ஞாபகம் வந்தது ரமேஷ் வருவதாக சொன்னது. அவசரமாக எழுந்து லுங்கியை சரியாக கட்டிக்கொண்டு குளியலறைக்குள் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து கதவைத் திறந்தான்.
திறந்ததுமே முதல் பார்வை ரமேஷின் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் மேல்தான் விழுந்தது.
ஒரு நிமிடம் உடம்பு முழுவதும் மின்சாரம் தாக்கியதைப் போல் இருந்தது.
வெகு அமைதியான அந்த முகம் மிகப்பெரிய தாக்கத்தை இதயத்தில் உண்டு பண்ணியது.
ஒரு நிமிடம் செயல்பட முடியாமல் நின்றான்.
புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் மலர்ந்தும் மலராத மலரைப் போன்ற அந்த முகம்.
மங்கிய வெளிச்சத்திலும் பொங்கும் நிலவொளியைப் போன்ற முகம்.
அழகிய பெரிய கண்கள். நீண்ட நாசி. வலது பக்கம் மின்னிய ஒற்றைக்கல் மூக்குத்தி. வடிவான உதடுகள். இதயத்தில் மெல்லிய பூக்களால் வருடுவதைப் போலிந்தது.
"உள்ள வாங்க!" இருவரும் உள்ளே வர வழிவிட்டு நகர்ந்தான்.
அவள் அவனுடன் கடந்து உள்ளே வந்தபோது அவளைத் தொட்ட காற்று அவனைத் தொட்டதில் அவன் சிலிர்த்துப் போனான்.
கலைந்து பறந்த கூந்தல் அவனை உரசியும் உரசாமலும் உணர்ச்சிகளைக் கூட்டியது.
"உட்காருங்க..." இருவருக்கும் எதிரேயிருந்த சோபாவை காட்டினான்.வாசல்பக்க இருட்டிலிருந்து உள்ளே வந்த அவளுடைய உருவம் இப்பொழுது பளிச்சென தெரிந்தது.
லைட் வெளிச்சத்தில் இப்பொழுது தெரிந்த அந்த முகம் மேகத்திலிருந்து வெளிப்பட்ட நிலவைப்போல் பளீரென மின்னியது.
இருவிழிகளிலும் அவள் உணர முடியாதபடி காந்தக் குவியல்.
பார்த்த ஒவ்வொரு பார்வையும் காந்த வீச்சு.
நேற்று வரை ஏன் சென்ற மணித்துளிகள் வரை நினைக்கவில்லை, இப்படி தனக்குள் ஏதோ உடைந்து சிதறும் என்று. சிதறும் உணர்வுகளை நிலை நிறுத்த முடியாமல் அவன் தடுமாறினான்.
இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.
அவள் அமர்ந்திருந்த அழகு தேவதை ஒன்று வானிலிருந்து இறங்கி வந்து அமர்ந்ததைப் போல்...
நிமிடத்திற்கு நிமிடம் அவனுக்குள் சிலிர்ப்பு எழுந்து எழுந்து அடங்கியது.
வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பனிடம் பேச நிறைய இருந்தது.
ஆனால் எதுவுமே பேச முடியவில்லை. உலக அழகி என்று அறிவிக்கப்பட்ட ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறான் என்று தோன்றியது.
"நான் காபி கலந்து எடுத்துட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு சமையலறைக்கு வந்தான்.
சட்டென்று பாலை எடுத்து அடுப்பில் வைக்கவோ கேஸை பற்ற வைக்கவோ தோன்றாமல் சமையலறை ஜன்னலைத் திறந்தான்.
தோட்டத்து மல்லிகையின் வாசனை கும்மென காற்றோடு வந்து நாசியைத் தாக்கியது.
தினமும் நுகரும் வாசனைதான். ஆனால் இப்பொழுதோ அந்த வாசனை அவளுடைய அழகை நுகர்வதைப் போல்...
அவள் தன்னை கடந்து உள்ளே வந்தபோது நாசியை தழுவிச் சென்ற அதே வாசனைமல்லிகை வாசனை என்ற அடையாளம் போய் அவளுடைய வாசனை - அவளுடைய பிரத்யேக வாசனை என்பதைப் போல் அவனுக்கு அறிமுகமாகியது.
அவளுடைய பெயர் என்ன? சுபாவா... இல்லையே... சுபா என்ற பெயருடன் இன்னும் ஏதோ சேர்த்து சொன்னதாக ஞாபகம்.
யோசித்தான்.
'சுபாங்கி...'
ஞாபகம் வந்தது.
'சுபாங்கி...?' எத்தனை அழகான பெயர்.
ஜன்னல் வழியே உள்ளே வந்த காற்றோடு அவன் உச்சரித்த பெயரும் கலந்ததால் வாசனை சுமந்த பெயராக இதயத்தை நிரப்பியது